புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் தங்களது புகைப்படங்களை கொடுக்க வேண்டாம். அடையாள அட்டையுடன் வரும் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களிடம் மட்டுமே புகைப்படத்தை வழங்க வேண்டும்,'' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில், பட்டியலில் புகைப்படம் இல்லாத வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று பாஸ்போர்ட் புகைப்படங்களை சேகரிக்கும் பணியில் தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், புகைப்பட வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாத வாக்காளர்களிடமிருந்து பாஸ்போர்ட் புகைப்படங்களை சேகரித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன.
அங்கீகரிக்கப்படாத நபர்களால் சேகரிக்கப்படும் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்தவும் இவை பயன்படுத்தப்படலாம்.
பொதுமக்கள் தேர்தல் பதிவு அதிகாரியின் கையெழுத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களிடம் மட்டும் தங்களது புகைப்படங்களை வழங்கவும். மற்ற அங்கீகரிக்கப்படாத நபர்களிடமோ, அரசியல் கட்சியினரிடமோ புகைப்படங்களை வழங்க வேண்டாம்.
இவ்வாறு நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment