]]

Wednesday, December 15, 2010

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட தகுதி அட்டை வழங்கும் விழா!


பரங்கிப்பேட்டை,டிச.16-

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசினார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கும் விழா வி.கே.ஐ. திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார். மாவட்ட உதவி செயற்பொறியாளர் சரவணக் குமார், சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராம ராஜு, தாசில்தார் காமராஜ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் முத்து. பெருமாள், குமராட்சி ஒன்றியக் குழு தலைவர் மாமல்லன், பேரூராட்சி மன்ற தலைவர் முகமது ïனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 2973 பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 327 பேருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் வீடு கட்டுவது என்பது கனவாகவே இருந்து வந்த நிலையில் அந்த கனவை நினைவாக்கியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசைகளே இருக்காது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் 5-வது முறையாக நடந்து வரும் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபரும் இந்த அரசால் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு அதிக அளவில் செங்கல் தேவைப்படுகிறது. செங்கல் சூளை வைத்து நடத்தும் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டு உளளது. தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 43 ஆயிரத்து 438 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் 6 ஆயிரத்து 407 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர். இதற்காக கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.19 கோடியே 14 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேருக்கு ரூ.359கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 376 குடும்பங்களுக்கு இலவச டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 69 ஆயிரத்து 54 பேருக்கு டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. இவ்வளவு திட்டங்களை அறிவித்துள்ள இந்த அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும். 6-வது முறையாக கலைஞர் முதல்- அமைச்சராக வருவார். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அப்போது தான் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜெயலலிதா வந்தால் இந்த திட்டத்தை ரத்து செய்து விடுவார். சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்சவள்ளி தியாகராஜன், டாக்டர் மனோகர், நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், மாவட்ட பிரதிநிதிகள் காண்டீபன், மணிவண்ணன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாராமன், கலையரசன், இளைஞரணி ஆயிப்பேட்டை ஜெயச்சந்திரன், ராம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: Daily Thanhti

0 comments: