]]
Showing posts with label மா.கம்யூ.. Show all posts
Showing posts with label மா.கம்யூ.. Show all posts

Sunday, September 23, 2007

புதுச்சேரியிலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு

அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடாக தலா 3.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல புதுச்சேரி மாநிலத்திலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு உறுதியான விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா. கம்யூ., பிரதேச செயற்குழு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

இடதுசாரிகளின் கோரிக்கையினை ஏற்று அமைக்கப்பட்ட ராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு இஸ்லாம் மக்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இஸ்லாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சிபாரிசுகளை சச்சார் குழு அறிக்கை அளித்துள்ளது.

சச்சார்குழு பரிந்துரையை அமுலாக்க மா. கம்யூ., நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும், சமூக நலத்திட்டங்களை வழங்கவும் அடிப்படை வசதிகளை அளிக்கவும் உரிய நடவடிக்கை வேண்டும்.

கிருஸ்தவ சிறுபான்மையினரும் நீண்ட காலமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஆகவே, தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.