போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. ராதா கிருஷ்ணன் கூறி னார்.
விழுப்புரம் சரக போலீஸ் சார்பில் விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது குறித்த 1 வார கால பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.
பயிற்சிக்கு பதிவாளர் ரத்தின சபாபதி தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பெரியய்யா, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியை சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக காவல் துறையில் அறிவாற்றல், திறமை, மனப்பாங்கு ஆகிய 3 அம்சங்கள் உள்ளது. அதில் அறிவாற்றல், திறமை போலீசாரிடம் உள்ளது. மனப்பாங்கு மட்டும் தேவைப்படுகிறது.
பொதுமக்களிடம் போலீசார் 2 விதத்தில் மட்டும் நன்மதிப்பை பெற்றுள்ளனர். குற்றங்களை கண்டு பிடித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் திறமையாக செயல்படுகிறார்கள்.
போலீசார் நடந்து கொள்ளும் முறையைதான் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நாம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய பணி நல்ல பணி. தமிழ்நாட்டு காவல் துறை மிக உயர்ந்த பணியை செய்துவருகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.
மதவாத, சாதிய, மொழிய, வட்டார சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது. காவல்துறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். மற்ற வேறு எந்த துறையாலும் கட்டுப்படுத்த முடியாது.
14 மாதம் ஐ.ஜி.யாக வேலைபார்த்து வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழக காவல்துறையை பாராட்டியுள்ளார்.
போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மன கஷ்டம் இல்லாமல் நம்முடைய வேலையை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) போடுவதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்ததான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு போலீஸ் ஐ.ஜி.ராதா கிருஷ்ணன் கூறினார்.
பயிற்சியை ஆஸ்பயர் இயக்குனர் சாமிநாதன், சங்கர்,பால்ராஜ் அளித்தனர். பயிற்சியில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி பல்கலைக் கழக நிர்வாக கட்டிடம் முன்பு நடந்தது.
பேரணியை சென்னை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ராதா கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் முதலாவதாக கொலை, 2-வது தற்கொலை, 3-வதாக சாலை விபத்து நடந்து வந்தது.ஆனால் தற்போது சாலை விபத்துகள் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் அதிக சாலை வசதி, அதிக வாகன வசதி ஆகியவற்றில் முதலிடம் இல்லாமல் இருந்தாலும் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.
காலையில் சுப்ரபாதத்தை கேட்பதற்கு பதிலாக சாலை விபத்து செய்தியை தான் முதலில் கேட்கிறோம்.
இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது. திண்டிவனம் கன்னியாகுமரி சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகம் பேர் தலையில் அடிப்பட்டு தான் உயிரை இழக்கின்றனர்.
உடல் நலத்திற்காக மினரல் வாட்டர் குடிக்கிறோம். அதே போல் உயிரை காக்க கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மட் விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு போலீஸ் ஐ.ஜி.ராதா கிருஷ்ணன் கூறினார்.
இதில் கலைத்துறை முதல்வர் ராஜேந்திரன், அறிவியல் துறை முதல்வர் வேணுகோபால் பி.மேனன், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ்.திட்ட அதிகாரி ஜெயராஜ், விசுவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment