இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட கூடுதலாக 684 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், விண்ணப்பித்தவர்களில் பாதி பேருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இரண்டாயிரத்து 700 இடங்கள் ஒதுக்கீட்டுக்கு மாறாக ஆறாயிரத்து 800 விண்ணப்பங்களை மாநில ஹஜ் குழு பெற்றுள்ளது.
இதுதவிர, 14 குழந்தைகளின் விண்ணப்பங்களும் வந்துள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்கும் வகையில் கூடுதல் ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு திருத்திய ஒதுக்கீடாக மூன்றாயிரத்து 384 இடங்களை அளித்ததுடன், அவற்றுக்கான பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யுமாறு, மும்பையில் உள்ள மத்திய ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில், ஹஜ் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் இம்மாதம் 14ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இந்த குலுக்கல் நடைபெறும்.
மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள பயணிகள் அல்லது குழுவில் உள்ள உறுப்பினர்கள் இக்குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment