ஐதராபாத் சம்பவம்
முஸ்லிம் லீக் கண்டனம்
"ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல். இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடிய சக்திகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்'' என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் பாஸித், கலிலுர் ரகுமான், மகளிர் அணித் தலைவர் பாத்திமா முசாபர், மாநில செயலர் சையது சத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக காதர் மொய்தீன், கேரள மாநில பொதுச் செயலராக அகமது, கர்நாடக மாநில பொருளாளராக தஸ்தகீர் ஆகா மற்றும் பீகார் மாநில செயலராக நயீம் அக்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
அமெரிக்காவின் ராணுவ ரீதியான நெருக்கம் இந்தியாவின் சுதந்திரமான வெளிவிவகார கொள்கையை பாதிக்கும் வகையில் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை விட்டுக் கொடுக்காத நிலையை அரசு தொடரவேண்டும்.
ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல். இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடிய சக்திகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கவேண்டும்.
அதே நேரத்தில் குண்டு வெடிப்பை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள மதரசாக்களில் திடீரென்று நுழைந்து சோதனை என்ற பெயரில் போலீசார் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
Post a Comment