]]
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

Wednesday, December 15, 2010

முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் - கருணாநிதி உத்தரவு

சென்னை, டிச.16-

சமச்சீர் கல்வி திட்டத்தில், சிறுபான்மை மொழிப் பாடங்களை கற்பிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தி, இந்த உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2010-2011-ம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டது. அத்துடன், கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பேசும்போது, 'பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும' என்று அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Source: Daily Thanthi