]]
Showing posts with label கிள்ளை. Show all posts
Showing posts with label கிள்ளை. Show all posts

Sunday, September 2, 2007

வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


ம.தி.மு.க.கோரிக்கை


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜீ என்கிற ராமதாஸ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் கிள்ளைக்கும் இடையே வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாறு கிள்ளை பேரூராட்சிக்கும், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும் மையப்பகுதியில் உள்ளது.


பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 கிராமங்களும், கிள்ளை பேரூராட்சியில் 50 கிராமங்களும் உள்ளது.


இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளைக்கும், கிள்ளையில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கும் படகு மூலமாக தான் செல்ல வேண்டும்.


மழைக்காலங்களில் படகுகள் செல்ல முடியாது. மழை நீர் வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடும். இதனால் படகுகள் கவிழ்ந்துவிடும் என்று படகுகள் நிறுத்தி வைக்கப்படும்.


இதன் காரணமாக கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்ல வண்டிகேட் வழியாக புவனகிரியை சுற்றி செல்ல வேண்டும். அதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.


இதனை கருத்தில் கொண்டு பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர்.


அதன்படி பாலத்தை கட்ட உலக வங்கி ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பணி தொடங்க டெண்டரும் விடப்பட்டுள்ளது.


இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் டெண்டர் விடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்க வில்லை.


இதனால் பொதுமக்கள் பரங்கிப்பேட்டை - கிள்ளைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


எனவே, பரங்கிப்பேட்டை - கிள்ளை பகுதி களில் 200 கிராம மக்களின் நலன்கருதி வெள்ளாற்று பாலத்தை துரிதமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, August 20, 2007

மீனவர்கள் மறியல் போராட்டம்

கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தக்கோரி கிள்ளை பகுதி மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு

கடல் முகத்துவாரத்தை ஆழப் படுத்தக்கோரி கிள்ளை பகுதி மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை யொட்டி முழுக்குத் துறை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்ன வாய்க்கால், அன்னை நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்தும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடலுக்கு சென்று மீன் பிடித்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1 மாதமாக ஆற்றுப்பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் அன்னங்கோவில் முகத்துவாரம் மணலால் மூடப்பட்டு உள்ளது. அதன் காரணமாக மீனவர்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வரு கின்றனர்.

முடசல் ஓடை கடலோர பகுதியில் சுமார் 500-க்கும் மேற் பட்டலம்பாடி எஞ்சின், பெரிய படகுகள், கட்டுமரம் போன்ற படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் முடசல் ஓடை ஆற்றுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீனவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி அப்பகுதி மீனவர்கள் தமிழக அரசுக்கும், மீன் வளத்துறை அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், மீன்துறை அதிகாரிக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த சென்னை வருவாய் துறை ஆணையர் பாரூக்கியிடனும் நேரில் மனு கொடுத்தனர். இருந்தும் எந்த வித பயனும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிள்ளை கடலோர மீனவ பகுதி மக்கள், கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தக்கோரி மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர்.


மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.