]]
Showing posts with label மூளைக்காய்ச்சல். Show all posts
Showing posts with label மூளைக்காய்ச்சல். Show all posts

Tuesday, August 28, 2007

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசியுடன் போலியோ சொட்டு மருந்து

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசியுடன் போலியோ சொட்டு மருந்து
இந்த ஆண்டு வழங்க நடவடிக்கை

ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு இந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் தடுப்பூசியுடன், போலியோ சொட்டு மருந்தும் வழங்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.


புனித மெக்காவில் உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடுவர் என்பதால், அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

இதனை சவுதி அரேபிய அரசே வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு இந்த தடுப்பூசியை இலவசமாகவே வழங்குகிறது. இந்த ஆண்டு நவம்பரில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மாநில ஹஜ்குழு உறுப்பினர் அலாவுதீன் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், ஹஜ் கமிட்டிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்த ஆண்டு ஆக. 30 முதல் செப். 1ம் தேதி வரை பல்வேறு தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட உள்ளன.

வயது மற்றும் தடுப்பூசி அளிக்கப்பட்ட தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பயணிகள் அனைவருக்கும் சவுதி அரேபியாவிற்கு புறப்படும் முன் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சவுதி அரேபிய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் இருந்து செல்ல இருக்கும் புனித பயணிகள் அனைவருக்கும் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போடப்படவிருக்கும் அதேதினம் மற்றும் அதே மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க இக்குழு உத்தேசித்துள்ளது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி கூறுகையில், "போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே வழங்கப்படும்' என்றார்.

Sunday, July 22, 2007

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


மூளைக்காய்ச்சல்


மூளைக்காய்ச்சல் நோய் கொசுக்கள் மூலம் பரவும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்த வகை நோயினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நோயை ஒழிப்பதற்கான பல்வேறு வகையான கொசு தடுப்பு முறை மற்றும் நோய் தாக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சைகளை தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


மேலும் இந்த நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு நிரந்தர முறையான மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 15 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


நோயின் நிலை


மூளைக்காய்ச்சல் நோயின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆண்டுகளாக காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆகும். இவற்றினால் ஏற்பட்ட இறப்பு 24 ஆகும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் கழுத்து இறுக்கம், இழுப்பு, நினைவு தடுமாற்றம், நிரந்தர நினைவு இழப்பு ஆகியவை ஏற்படும்.

இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளில் சுமார் 25 சதவீதம் இறப்பும் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரையிலான குழந்தைகளுக்கு நிரந்தர ஊனமும் ஏற்படும். நோயின் தாக்கம் 1 முதல் 15 வயதுள்ள குழந்தைகளிடமே அதிகமாக காணப்படுகிறது.


நோய் பரவும் முÛமூளைக்காய்ச்சல் நோய் கொசுக்கள் மூலம் பரவும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் ஆகும்.

இவ்வகையான வைரஸ் கிருமிகள் கொக்கு, நாரை, வாத்து போன்ற பறவைகளிடம் இருந்து பன்றிகளும், மனிதர்களுக்கும் அல்லது பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.


இந்த நோயை பரப்பும் கொசுக்கள் பொதுவாக வயல் வெளிகளில் பெருக்கம் அடைந்து, கரும்பு வயலில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை, முதிர்ந்த கொசுக்களை பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு மற்றும் புகைமருந்து அடித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மேலும் நோய் தாக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நோய் தடுப்பூசி முகாம்

மாவட்டத்தில் உள்ள 1 முதல் 15 வயதுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜுலை 16-ந் தேதி முதல் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக சுமார் 15 தினங்களுக்கு ஒரே தவணையில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரம் தோறும் முகாம் அமைத்து தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

இந்த முகாம்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படுகிறது.


இதற்காக மாவட்டம் முழுவதும் 192 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் இரண்டு கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வளர் போன்ற 5 நபர்கள் கொண்டதாக இருக்கும்.

இவற்றில் கிராம சுகாதார செவிலியர் ஒவ்வொருவரும் தினமும் அதிகபட்சமாக 150 குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட ஆவன செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி அளிப்பதன் தரம் உறுதி செய்யப்படுகிறது.


சீனாவில் இருந்து இறக்குமதி


மூளைகாய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும். இது உலக சுகாதார நிறுவனத்தாலும் இந்திய அரசாலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தரமான தடுப்பூசி ஆகும்.

இவற்றை பல உலக நாடுகள் பயன்படுத்தி அதன் மூலம் மூளைக்காய்ச்சல் நோயினை கட்டுப்படுத்தி நிரந்தர தீர்வு கண்டு உள்ளன. இந்த தடுப்பூசி ஒரு முறை பெற்றவர்கள் இந்நோய் வராமல் தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான பாதுகாப்பை பெறுகின்றனர்.

இந்த முகாமில் சுகாதார துறையோடு கல்வித்துறை, சத்துணவுத்துறை, சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனைத்து துறை மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 முதல் 15 வரையிலான சுமார் 8 லட்சத்து இருபதாயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு கடலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tuesday, July 17, 2007

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள் மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள்
மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர், ஜூலை 17:

கடலூர் மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் 15 தினங்கள், குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 2003 முதல் 2006 வரை ஆண்டுதோறும் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு தலா ஒருவர் இறக்க நேரிட்டது. இதனைத் தடுக்க 1 முதல் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 8,16,944 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி முகாம்கள் 23-ம் தேதி தொடங்கி 15 தினங்களுக்கு நடைபெறும்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா தலைமையில் பணியாளர்களைக் கொண்ட 10 முதல் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபடும். நாளொன்றுக்கு 300 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் வராது. லேசான ஜுரம், தலைவலி, வீக்கம் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவக்குழு உடனே சிகிச்சை அளிக்கும்.

கடுமையான ஜுரம், மஞ்சள் காமாலை நோய் கண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு, பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.