]]
Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts

Sunday, September 16, 2007

பல் டாக்டர்களுக்கு காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்

பல் டாக்டர்களுக்கு காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்

பல் டாக்டர் படிப்பு முடித்து விட்டு, அத்துறையில் தான் வேலை வேண்டும் என்று அடம் பிடிக்காதோருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 43 பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் மொத்த பல் டாக்டர்கள் பணியிடங்களின் எண்ணிக்கை 229 மட்டுமே.

பல் டாக்டர் இளநிலை பட்டப்படிப்பு முடித்தோர், பெரும்பாலும் முதுநிலை படிப்புக்கு செல்வதில்லை. முதுநிலை படிப்பு கல்விக் கட்டணம் மிகவும் அதிகம் என்பது தான் இதற்கு காரணம்.

அரசு கல்லூரிகளில் ரூ. 20 ஆயிரமும் தனியார் கல்லூரிகளில் ரூ. 1.54 லட்சமும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் ரூ. 1.56 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுகலை படிப்பு முடித்தாலும், வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இளநிலை பட்டப் படிப்பு முடித்த பல் டாக்டர்களுக்கு தாங்கள் படித்த துறையில்தான் தொழில் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு வேறு வகையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இளநிலை பல்மருத்துவ பட்டப் படிப்பு முடித்தோர், அரசு வேலை கிடைக்காமல் போனால், தனியாக கிளினிக் வைக்கலாம். ஆனால், கிளினிக் உபகரணங்களுக்கு மட்டும் ரூ. ஆறு லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

இதைத் தவிர மாத வாடகை, உதவியாளர் சம்பளம் எல்லாம் தனி.

எனவே, பல் மருத்துவ கிளினிக் அமைப்பது மிகவும் செலவு ஏற்படக்கூடியது.

பல் மருத்துவத்தில் தான் ஈடுபடுவேன் என்று அடம் பிடிக்காத பல் டாக்டர்கள், பெங்களூரில் இப்போது மருத்துவ நடைமாற்று வல்லுநர்கள், இன்சூரன்ஸ் ஏஜன்டுகள், டேட்டா என்ட்ரி, பிசினஸ் பிராசசிங் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மற்றும் கால் சென்டர்களில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கின்றனர்.

பல் மருத்துவத் தொழிலில் ஈடுபட ஓராண்டாக காத்திருந்த டாக்டர் ஜோதி, அந்த எண்ணத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு இப்போது அவுட்சோர்சிங் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

முதுநிலை படிப்புக்கோ, அல்லது தனியாக கிளினிக் அமைப்பதற்கோ தேவையான பணம் இல்லாததால், அவரது முடிவு மாறியது. அவுட்சோர்சிங் துறை, தனது படிப்புக்கு சம்பந்தமே இல்லா விட்டாலும், இது மிகவும் சவாலான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான வேலையாக இருக்கிறது என்கிறார் ஜோதி.

இந்த வேலையில் சுளையாக கிடைக்கும் சம்பளத்தை சேமித்து வரும் ஜோதி, அதை சேமித்து ஒரு பல் மருத்துவமனை கிளினிக் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

Saturday, September 15, 2007

3.5 சதவீத தனி இடஒதுக்கீடு

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு - தமிழக அரசு அவசர சட்டம்

கருணாநிதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு

தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்;

ஆணையம் ஆய்வு

2006-2007ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக - நீதிபதி ஜனார்த்தனத்தை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் - இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.5 சதவீதம் ஒதுக்கீடு

ஜெ.அ.அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, அண்ணாவின் 99-ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, August 20, 2007

6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

வேலை வாய்ப்பக சீனியாரிட்டிப்படி 6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
- கல்வி அமைச்சர் தகவல்

"இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியான 6 ஆயிரத்து 102 ஆசிரியர் பணியிடங்கள் 1:1 என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்'' என்று கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை தேவை அடிப்படையில் 7 ஆயிரத்து 979 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு வந்த 5 ஆயிரத்து 98 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முதல்வர் கருணாநிதியால் விரைவில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மீதமுள்ள 2 ஆயிரத்து 881 பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆயிரத்து 102 பணியிடங்கள் காலி ஏற்பட்டன. இப்பணியிடங்களில் பதவி உயர்வு அளித்த பின்னர் மீதமுள்ளவைகளக்கு 1:1 என்ற விகிதாச்சாரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள 2 ஆயிரத்து 683 பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இதே முறையில் நிரப்பப்படும்.

7 ஆயிரத்து 223 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களால் நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.