]]
Showing posts with label பிளஸ் 2. Show all posts
Showing posts with label பிளஸ் 2. Show all posts

Wednesday, September 26, 2007

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு கட்டணம் ரத்து

தமிழ் வழியில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கட்டணம் ரத்து

தமிழ் வழிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 10 மற்றும் 12ம் வகுப்பை தமிழ் வழியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுநாள் வரை, பள்ளி மூலமாக மேல்நிலைத் தேர்வு எழுதுபவர்கள் செய்முறை தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.225ம், செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.175ம் தேர்வுக் கட்டணமாக செலுத்தி வந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு கட்டணமாக ரூ.115 வசூலிக்கப்பட்டது.

வரும் 2008 மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகள் முதல் இந்த தேர்வுக் கட்டண விலக்கு நடைமுறைக்கு வருகிறது.

எனவே, பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ்வழியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

ஆனால், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் வழக்கம் போல தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாடநூல்கள்... இனி 'ஆன்லைனில்'

பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இனி 'ஆன்லைனில்' பார்க்கலாம்

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது.

அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை வழங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் பள்ளி கல்வி துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது.

தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைவர் ஹேமந்த்குமார் அனைவரையும் வரவேற்றார். அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.

இணைய தளத்தை துவக்கி வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

பிளஸ் 2 வரையிலான 502 பாட தலைப்புகளில் தொழிற் கல்வி நீங்கலாக 322 பாட தலைப்புகளும், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது, மலையாளம் போன்ற சிறுபான்மை பாட நூல்களும் ரூ. 50 லட்சம் செலவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த 'டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மற்றும் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

ஆயிரத்து 180 மேனிலைப் பள்ளிகள், ஆயிரத்து 500 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இணையதளத்துடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Wednesday, September 19, 2007

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் சார்பில் மதுரை லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் செப்.28ம் தேதி 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது. இதில் 2,500 பேர் உடனடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதுகுறித்து வாரிய இயக்குனர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

இந்நிறுவனம் பொறியியல் பட்டம், பொறியியல் டிப்ளமா மற்றும் பிளஸ் 2 (தொழிற்கல்வி) பயின்ற மாணவர்களுக்கு ஓராண்டு செயல்முறைப் பயிற்சியினை மாத உதவித் தொகையுடன் வழங்குகிறது.

மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினை அளிக்கிறது.

தென்மாவட்ட மாணவர்கள் நலன்கருதி வாரியம் சார்பில் மதுரை அழகர்கோயில் கிடாரிபட்டியில் உள்ள 'லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி'யில் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்கு 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது.

இதில் டி.வி.எஸ்., குரூப், சக்தி குரூப், ஸ்பிக் ஜெல் இன்டஸ்டிரியல் கன்ஸ்சல்டன்ட், நோகியா உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கின்றனர்.

இதில் 1500 பொறியியல் டிப்ளமா மற்றும் 1000 பிளஸ் 2 (தொழிற்கல்வி) மாணவ, மாணவர்கள் உடனடியாக தேர்வாகின்றனர்.

டிப்ளமா, பிளஸ் 2 படித்து மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இச்சலுகையை அனுபவித்தவர் கலந்து கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி முதல்வர் சேதுபதி கூறியதாவது:

முகாமில் கலந்து கொள்வோர் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்குள் கல்லூரியில் இருக்க வேண்டும்.

கல்லூரி சார்பில் மேலூர், மத்திய, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பஸ் இயக்கப்படுகிறது.

அரசு டவுன் பஸ் வசதியும் (கட்டணம் உண்டு) செய்யப்பட்டுள்ளது.

அசல் கல்விச் சான்றுகள், சுய குறிப்பு மூன்று நகல்களுடன் மாணவர்கள் வர வேண்டும்.

செப்.21ம் தேதிக்குள் சுய குறிப்புடன் 'இயக்குனர், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், 4வது குறுக்குத் தெரு, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-13'

அல்லது

'முதல்வர், லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி, கிடாரிபட்டி, அழகர்கோயில், மதுரை 625 301' என்ற விலாசத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.